Header Ads

Header ADS

பாசமலர்களான கோலி, ரோஹித்; பனிப்போர் பைசலான ரகசியம்

புதுடெல்லி, மார்ச் 31-

ரோஹித், கோலி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் இடையே பனிப்போர் நிலவி வந்ததாக தகவல்கள் பரவின. ஆனால் தற்போது இருவரும் சேர்ந்து ஒற்றுமையோடு செயல்படுகின்றனர். இருவரின் இந்த திடீர் மாற்றத்துக்கான ரகசியம் கசிந்துள்ளது.

கோலி-ரோஹித்

இந்திய கிரிக்கெட் அணியில் ஒருநாள், டுவெண்ட்டி20 மற்றும் டெஸ்ட் என 3 வித போட்டிகளுக்கும் கேப்டனாக விராட் கோலி உள்ளார். ஒருநாள் மற்றும் டுவெண்டி20 போட்டிகளில் ரோஹித் ஷர்மாவும், டெஸ்ட்க்கு அஜிங்கியா ரஹானேவும் துணை கேப்டன்களாக உள்ளனர்.

ரோஹித், கோலி

விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் ஒருநாள், டுவெண்டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக ரன்குவித்து வருகிறார்கள். இருவருக்கும் எதிரணி வீரர்கள் அச்ச உணர்வுடன் தான் பந்துவீசும் சூழல் உள்ளது. இதனால் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென்களாக இருவரும் மாறியுள்ளனர்.

ஒற்றுமை இல்லையா

கடந்த 2019ம் ஆண்டு நடந்த உலககோப்பை கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா 5 சதங்கள் விளாசினார். மொத்தம் 648 ரன்கள் குவித்தார். இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்து வெளியேறியது.

கோலி, ரோஹித்

உலககோப்பை போட்டியில் இந்தியா வெளியேறியதற்கு அணி வீரர்கள் இடையே ஒற்றுமை இல்லாதது தான் காரணம் என்ற குற்றச்சாட்டு பூதாகரமாக எழுந்தது. அதாவது அணியின் ஒருதரப்பு வீரர்கள் கோலி தலைமையிலும், இன்னொரு தரப்பினர் ரோஹித் தலைமையிலும் செயல்படுவதாக கூறப்பட்டது.

கொளுத்தி போட்ட ஒருதரப்பு

மேலும் இந்திய அணியின் டுவெண்டி 20 அணி கேப்டனாக ரோஹித்தை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை சற்று பலமாக ஒலிக்க தொடங்கியது. இதற்கிடையே விராட் கோலியின் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களை ரோஹித் ‛அன்பாலோ’ செய்த தகவலும் வெளியானது.

கோலி, ரோஹித்

இந்நிலையில் தான் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஐ.பி.எல்.லில் சிறப்பாக செயல்பட்டாலும் இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேவேளையில் கோலி தலைமையிலான ஆர்.சி.பி.யில் அங்கம் வகித்த சிராஜ், சைனி ஆகியோர் அடுத்ததடுத்து இந்திய அணிக்கு தேர்வாகி விளையாடினர். இதற்கு காரணம் கோலி தான் என ஒருதரப்பினர் கொளுத்திபோட்டனர்.

தீயாய் பரவிய செய்திகள்

அதன் பிறகு நடந்த போட்டிகளின் போதும் மைதானங்களில் கோலியும், ரோஹித்தும் அதிகமாக பேசிகொள்ளவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கோலி, ரோஹித் இடையே மோதல் என்ற செய்திகள் பஞ்சமில்லாமல் தீயாய் பரவின.

ரோஹித், கோலி

ஆனாலும் இதுபற்றி கோலி, ரோஹித் மற்றும் பி.சி.சி.ஐ., தரப்பு என யாரும் விளக்கம் அளிக்கவில்லை. இருப்பினும் இருவரின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனிக்க தொடங்கிய ரசிகர்களும் இருவருக்குள் ஏதோ மனக்கசப்பு உள்ளது என புலம்ப தொடங்கினர்.

திடீர் மாற்றம்

இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா–இங்கிலாந்து இடையேயான டுவெண்டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கோலி, ரோஹித் அடிக்கடி பேசி கொண்டனர். பார்க்கும் போதெல்லாம் புன்னகைத்தனர். இங்கிலாந்துக்கு எதிரான 5வது டுவெண்டி20 போட்டியில் ரோஹித்துடன் தொடக்க ஆட்டக்காரராக விராட்கோலி களம் இறங்கினார். இந்த ஜோடி 94 ரன்கள் குவித்தது.

ரோஹித், கோலி

இந்த போட்டியில் இந்தியா வென்ற நிலையில், ‛‛வரும் நாட்களில் ரோஹித்துடன் சேர்ந்து தொடக்க வீரராக ஆட விரும்புகிறேன்’’ என கோலி தெரிவித்தார். மேலும் ‛‛அணியின் நலன்கருதி கோலி எடுக்கும் முடிவுக்கு உடன்படுகிறேன். என்னுடன் சேர்ந்து அவர் ஆட்டத்தை தொடங்கினால் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை’’ என ரோஹித் கூறினார்.

இதுஒருபுறம் இருக்க ஒருநாள் போட்டிகளின்போது கடைசி நேரத்தில் கோலி, ரோஹித் ஆகியோர் சேர்ந்து ஆலோசித்து இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை தட்டி தூக்கினர். கோலி, ரோஹித் இருவரின் இந்த திடீர் மாற்றம் அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சாத்தியமானது எப்படி

இது எப்படி சாத்தியமானது என்பதை அறிய ரசிகர்கள் துடித்தனர். அதன் ரகசியம் தற்போது கசிந்துள்ளது.

ரவி சாஸ்திரி
இருவரின் மாற்றத்துக்கும் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தான் மூளையாக இருந்துள்ளார். அவரது முயற்சியால் தான் இது சாத்தியமாகியுள்ளது. அப்படி ரவிசாஸ்திரி என்ன செய்தார் என்பது பற்றி இந்திய கிரிக்கெட் அணியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள பிரபலம் ரகசியம் உடைத்தார்.  அவர் கூறியதாவது:

அருகருகே அமர்ந்து பேச்சு

கொரோனா பரவல் காரணமாக வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவாமல் இருக்க வீரர்கள் கண்காணிப்பு வளையத்தில் இருந்தனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாக அதிக வாய்ப்பு  உள்ளது. இது வீரர்களின் விளையாட்டையும் பாதிக்கும். இதை தவிர்க்க  தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி திட்டமிட்டார். ஒவ்வொரு வீரரையும் பிற வீரருடன் சகஜமாக பழகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.

கோலி, ரோஹித்

இதற்கு கோலி, ரோஹித்தும் விதிவிலக்கல்ல. இருவரையும் இருக்கைகளில் அருகருகே அமர வைத்து பேசவைத்தார். இருவரும் நீண்டநேரம் பேசினர். தங்களுக்குள் இருக்கும் மனநிலையை ஒருவருக்கொருவர் எடுத்து கூறினர். இருவரின் உள்ளுணர்வுகளும் வெளிப்பட்டன. இறுதியில் மனஸ்தாபங்கள் மாயமானது.

நட்பு புதுப்பிப்பு

இதன்மூலம் தற்போது இருவரின் நட்பும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா கண்காணிப்பு வளையத்துக்குள் இருந்து விளையாடி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களை வென்றைத விட விராட் கோலி, ரோஹித் இடையேயான மனக்கசப்பு நீங்கியது தான் ஓய்வறையில் பெரும் மகிழ்ச்சியா உள்ளது.

ரோஹித், கோலி, ரவிசாஸ்திரி

மேலும் நடைபெற உள்ள தொடர்கள், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், போட்டிக்கு தயாராதல், அணியின் நலன் குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து கோலி, ரோஹித் ஆகியோர் தற்போது ஒன்றாக விவாதித்து வருகிறார்கள். ரவிசாஸ்திரி முயற்சியால் இருவரும் இரட்டைகுழல் துப்பாக்கியாக ஒத்திசைவுடன் ஒரேதிசையில் பயணிக்கும்பட்சத்தில் அது நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரும் பலமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

சொல்லாமல் சொல்லும் கோலி, ரோஹித்

இதற்கிடையே மனக்கசப்பு குறித்து இருவரும் இதுவரை வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான டுவெண்டி20 தொடர் முடிவில் கோலி, ரோஹித் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து பட புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததையும், இருவரும் ஒன்றாக நின்று பேசியதையும் பார்க்க முடிந்தது.

இதன்மூலம் இருவரும் நண்பர்கள். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என வெளியூலகிற்கு சொல்லாமல் சொல்லி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.